கொரோனாவுக்கு மாட்டு சாணம் மருந்து என்று கூறி சாணம் விற்றவர் கைது

கொரோனாவை எதிர்க்க கோமியமா?
ரூ.1000க்கு கோமியம் விற்ற பால் வியாபாரி
சீன நாட்டின் யுகான் நகரில் பூதாகரமாய் உருவாகி, உலகம் முழுவதும் 162 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா, ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கி வருகின்ற நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா தாக்கத்தால் பல இடங்களில் வியாபாரங்கள் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரம் சரிந்த வண்ணம் உள்ளது. இந்தக் கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த, யாரேனும் மருந்து கண்டுபிடித்து கூற மாட்டார்களா?… என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
ஆனால் “யாருக்கு என்ன நேர்ந்தால் எங்களுக்கென்ன?… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சம்பாதிப்போம்” எனும் கொள்கை உடையவர்கள் நம்மில் நிறைய பேர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் மபூத் அலி என்கிற பால் வியாபாரி.
மபூத் அலி தன்னிடம் உள்ள இந்தியப் பசு மற்றும் ஜெர்சி பசுவின் மூலம் வரும் பாலை விற்று, பணம் சம்பாதித்து வரும் நிலையில், மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணம் கொரோனா வைரஸை அண்டவிடாமல் பாதுகாக்கும் என்று சில ‘திடீர்’ மருத்துவர்கள் இவரிடம் யோசனை கூறியிருக்கின்றனர்
ஆசை யாரை விட்டது. வேக வேகமாய் களத்தில் இறங்கி விற்பனையைத் தொடங்கி இருக்கிறார் மபூத் அலி.
‘கொரோனாவுக்கான சிறந்த மருந்து இதுதான்’ என இவர் கூறியதை முழுமையாய் நம்பிய மக்களில் பலர், ரூபாய் 500க்கும் 1000 க்கும், கோமியம் மற்றும் மாட்டு சாணத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
மாட்டு சாணம் விற்பனையில் மாபெரும் லாபம் சம்பாதித்து திடீர் பிரபலமடைந்த மபூத் அலி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.
“நாட்டுப் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் விற்பனை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பால் விற்பனையை விட இது அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது” என்று கோமிய புகழ் பாடியுள்ளார்.
மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனாவை குணப்படுத்தும் என எந்த ஆய்வறிக்கையும் கூறாத நிலையில், மக்கள் இதனை வாங்கிச் சென்று பயன்படுத்துவது, அவர்களின் அறியாமையை விளக்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோமிய விற்பனையில் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த பால் வியாபாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
