World

கொரோனா பரிசோதனையில் குச்சி உடைந்ததால் குழந்தை மரணம்!

சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.

இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது. இது குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தை கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading