சவுதி இளவரசருக்கு எதிராக கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறை!

மன்னர், இளவரசருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை, அதே நாட்டைச் சேர்ந்த நூரா என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து அவர் சைபர் கிரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட நூராவுக்கு மன்னர் மற்றும் இளவரசர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நூராவுக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம், ‘சர்ச்சைக்குரிய டுவிட் பதிவால் பொது ஒழுங்கை சீர்குலைக்கும்படி உள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க விரும்புவோரின் செயல்பாடுகளைத் தூண்டுவதாக உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் சவூதி அரேபியாவின் சமூக கட்டமைப்பை நூரா சேதப்படுத்தி உள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தண்டனையானது, வளைகுடா நாடுகளின் மனித உரிமை நிலைமையை அம்பலப்படுத்தி உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளன.
…
