Local

சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

 

இதனைத் தொடர்ந்து, தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுதலை செய்த நீதிபதி, அவர்களுக்கான வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.

 

பின்னர், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

 

இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஇப்பன்வெவ பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது சேதமடைந்தன.

 

மேற்படி சொத்துகளுக்கான நட்டஈடு கோருவதை அதிகாரிகள் நிராகரித்திருந்த போதிலும், அதற்கு மாறாக நட்டஈடு வழங்கும் அலுவலகத்தில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, 8,850,000 ரூபா நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக “ஊழல்” எனும் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading