Local

சிறுமியைக் கர்ப்பமாக்கிய ஐயருக்கு விளக்கமறியல் உடந்தையான தாய்க்கு பிணை!

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022ம் திகதியன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸ் பிரிவில் சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோயில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர்.

பின்னர் 2022.05.27ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோயில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பிரதான சந்தேக நபரான பூசாரி பெரிய நீலாவணைப் பகுதியிலுள்ள கோவில் பூஜைக்காகச் சென்று வருவதுடன், தினமும் அப்பகுதி வழியாகச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பின்னர் தனிக்குடித்தனம் என்ற பெயரில் பூசாரி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இதன் போது பூசாரியின் தாயும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில், தந்தையார் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக வழக்கமாகச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனிமையிலிருந்த சிறுமியின் நிலைமையைப் பயன்படுத்தி சந்தேக நபரான பூசாரி இச்செயலை புரிந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading