ஜூன் 17 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் தடுக்க ஜூன் 17 வரை ஊரடங்கை மேலும் 16 நாட்கள் நீட்டிப்பதாக ஒடிசா அரசாங்கம் இன்று அறிவித்தது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
“ஊரடங்கு முதன்மையாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, பொருட்கள் அல்ல. முந்தைய ஊரடங்கின் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்குகளும் மூன்றாம் கட்டத்திலும் செயல்படுத்தப்படும்” என்று தலைமைச் செயலாளர் எஸ்.சி மொஹாபத்ரா கூறினார்.
மேலும் வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் முழுமையான ஊரடங்கும் தொடரும் என்றார்.
இதற்கிடையே இன்று 9,541 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 7,56,684 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 33 புதிய இறப்புகள் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளன என சுகாதாரத் துறை அதிகாரி கூறினார்
