ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலா 168 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது

ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிதாக ஏராளமான சொத்துகளை வாங்கினார். அப்போது ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சசிகலா இவ்வாறு பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர் வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் சசிகலா ரூ.1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சொத்துகளை சில பினாமிகள் மூலமாகவும் வாங்கியிருப்பது தெரியவந்தது என்கிறது அந்த செய்தி.
புதுச்சேரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. அவர்களது சொத்துகளை முடக்கம் செய்தது.
அதை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
