டெஸ்லா ஒரு நரகம்… 11 ஆண்டுகள் அங்கே வேலை பார்த்த பெண் கூறிய விடயம்
டெஸ்லா நிறுவனத்தின் நிதி மற்றும் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் ஒருவர் வேலையை விட்டு விலகியதுடன், எலோன் மஸ்கின் கீழ் பணியாற்றுவது என்பது நரகம் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்தியரான ஸ்ரீல வெங்கடரத்தினம் என்பவரே நீண்ட 11 ஆண்டுகள் டெஸ்லா நிறுவனத்தில் வேலை பார்த்த பின்னர் விலகியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது 779.33 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

அதன் ஒரு பங்கின் மதிப்பு இன்று 5.27 சதவிகிதம் அதிகரித்து 248.71 அமெரிக்க டொலராக உள்ளது. ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிய பொறுப்புக்கு வந்ததன் பின்னர் எலோன் மஸ்கின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் விரோதமாக மாறியுள்ளது.
பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் நிலைக்கு மஸ்க் காரணமாக மாறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் பல மாகாணங்களில் டெஸ்லா வாகனங்கள் மற்றும் டெஸ்லா வணிக மையங்கள் மீது மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெஸ்லா வாகனம் மற்றும் அதன் தொடர்புடைய மையங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் 20 ஆண்டுகள் வரையில் தண்டனையை அனுபவிப்பார்கள் என ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டலும் விடுத்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகியதன் தொடர்ச்சியாகவே ஸ்ரீல வெங்கடரத்தினத்தின் விலகலும் நடந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் கடுமையான பணிச்சூழலே மூத்த நிர்வாகிகள் பலர் விலக காரணமாக கூறப்படுகிறது.
டெஸ்லாவில் இருந்து விலகியதன் பின்னர் ஸ்ரீல வெங்கடரத்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இளகிய மனம் படைத்தவர்கள் டெஸ்லாவில் பணியாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தாம் சுதந்திரமாக உணர்வதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது என்பதையும், தமது நண்பர்களை ஒவ்வொருவராக மீண்டும் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், தமது உடல்நலனையும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
2013ல் டெஸ்லா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளின் இயக்குநராக ஸ்ரீல வெங்கடரத்தினம் பொறுப்பேற்றார். தொடர்ந்து கடும் உழைப்பால் 2019ல் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். ஜூன் 2024ல் டெஸ்லாவில் இருந்து வெளியேறினார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் Model S, Model X, Model 3, Model Y மற்றும் Cybertruck வரையில் உருவாக முதன்மையான பங்கு வகித்தார்.

டெஸ்லாவின் வாகனங்கள் மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தி முயற்சிகளிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நிதித்துறை சார்ந்த பல்வேறு பட்டங்களை ஸ்ரீல வெங்கடரத்தினம் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.