Local

தமது கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத மாமனார்: வீட்டைவிட்டு விரட்டிய மருமகன்

மே தினப் பேரணிகள்‘ தொடர்பில் சில சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகள், கதைகள் மற்றும் விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

தொழிலாளர்களின் உரிமைகளையும், தொழில் சுதந்திரத்தை எடுத்துக் கூறும் தினமாக இது பார்க்கப்பட்டாலும் இந்த அரசியல் பேரணிகளால் பொது மக்களுக்கு என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேல் மாகாணத்தின் களுத்துறை பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் மருமகன் ஒருவர் தாம் சார்ந்தக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொள்ளாது வேறொரு கட்சியின் பேரணியில் கலந்துக் கொண்டதற்காக தனது மாமனாரை வீட்டை விட்டு துரத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த வீட்டில் வசிக்கும் மகளும், மருமகனும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சார்பானர்கள்.

மாமனார் தமக்கு வாக்குரிமை கிடைத்த காலம் முதல் வேறு ஒரு கட்சிக்கு சார்பாக தமது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறவர்.

இம்முறை இருவரும் மே தினப் பேரணிக்கு செல்ல முன் கூட்டியே தயாராகி வர, மருமகன் மாமனாரிடம், “அந்த கட்சியால் வெற்றிபெற முடியாது, எங்கள் கட்சியின் மே பேரணிக்கு நீங்கள் வர வேண்டும் எனக் கூறி, பயணச் செலவும் கொடுத்து மாமனாருக்கு மரியாதையுடன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இருவரும் மே மாத பேரணிக்கு செல்ல புறப்பட்டனர். மே தின பேரணிக்கு செல்லும் பேருந்துகள், நிற வேறுபாடின்றி அணிவகுத்து நின்றுள்ளன.

மகிழ்ச்சியில் திளைத்த மருமகன், தன் கட்சிக்காரர்களிடம், “ஆச்சரியப்பட வேண்டாம், இன்று என் மாமனார் வந்திருக்கிறார்.‘‘ என தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் புறப்படத் தயாரான நிலையில் தனது கட்சியின் வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு பேருந்தில் ஏறிய மருமகன், சுற்றும் முற்றும் பார்த்த போது பேருந்தின் உள்ளே மாமனாரை காணவில்லை.

மாமனார் தனது கட்சியின் மே தின பேரணியை நிறைவு செய்து விட்டு மாலையே வீடு திரும்பியுள்ளார். அத்தருணத்தில் மாமனார் வீட்டில் இருக்கவில்லை.

இந்த நிலையில் மாமனார் வீடு திரும்பும் போது அவரின் பாய் , தலையணை மற்றும் ஆடைகளை வெளியே போட்டுவிட்டு, வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டார் மருமகன்.

ஆச்சரியமடைந்த மாமனார் கதவைத் தட்டினார்.

மகள் ஒரு ஜன்னலைத் திறந்து “அப்பா, இன்று முதல் உங்களை இங்கு அனுமதிக்க முடியாது, நீங்கள் சென்ற இடத்தில் இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

காரணம் புரிந்த மாமனார், வீட்டை விட்டு வெளியேறினார்.

அன்று இரவிலிருந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தைத் தன் வீடா மாற்றிக்கொண்ட மாமனார், “அன்று முதல் நான் வாக்களித்த கட்சியை என்னால் மாற்றவே முடியாது ” எனக் கூறி வருகிறாராம்.

ஆரவாரத்துடன் மே தினக் கூட்டங்கள் , பேரணிகள் முடிந்துவிட்டன. ஆனால் ஒரு கட்சிக்கு ஆதரவாக சென்ற மாமனார் இன்று வீதியில்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading