நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் பிரதமருக்கு அபராதம்!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றிற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்டி, இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 25 எம்பிக்கள் இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் ஆட்சியை கைப்பற்ற அவர் கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நெருக்கடிக்கு இடையே தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடந்த 16ம் தேதி நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றச்சாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, கைபர் பக்துங்வா மாகாண முதல்வர் மஹ்மூத் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் அமைச்சர்கள் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
