Local

நடிக்காதீர்கள் நடித்தாலும் அந்நடிப்பிற்கு தங்கமுலாம் பூசாதீர்கள்!

அரசுடன் இருப்பது, ஆனால், கட்சியுடனும் இருப்பதுபோல் காட்டிக்கொள்வது. ஆனால், அத்துடன் நின்றுவிடுவதில்லை. கிடைக்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலெல்லாம் தோன்றி தங்களது நடிப்பிற்கு தங்கமுலாம் பூசுவது. தங்களை உத்தமர்களாக காட்டமுனைவது.

தாங்கள் முன்வைக்கும் வாதங்களெல்லாம் முரண்பாடுகளின் சங்கமம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. தீக்கோழியின் நிலை.

தனது தலைவரின் விடுதலைக்காகவே தாம் அரசுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாக கூறுவது. ஆனால் தனது தலைவர் பாராளுமன்றம் வந்து, தான் 100 நாட்களுக்குமேல் அநியாயமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக முறையிடும்நிலை. அப்படியானால் இவர்கள் அரசு ஆதரவு நிலைப்பாடு இவர்கள் தலைவருக்கு கொண்டுவந்த நன்மையென்ன?

இவர்களின் தலைவரை நோக்கி ஆளும்கட்சி அமைச்சர் கூறுகிறார்; உங்களது தடுத்து வைப்பிற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை; என்று. அந்நேரம் தடுப்புக்காவல் உத்தரவை நீதித்துறையா வழங்கியது? நிறைவேற்றுத்துறையல்லவா? நிறைவேற்றுத்துறை என்பது அரசாங்கம் இல்லையா? என்றொரு கேள்வியை தமது தலைவருக்கு ஆதரவாக கேட்பதற்கு முடியவில்லை.

20 இல் இரட்டைப் பிரஜாஉரிமை சம்பந்தப்பட்ட சரத்து நீக்கத்திற்கு ஆதரவளிக்கும்போது சில இனவாத அரசியல் செய்பவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க இது அவசியம். அதனால்தான் வாக்களித்தோம்; என்பது. பின், அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது.

அவர்கள் அதற்கு நன்றிக்கடனாக இவர்களது தலைவரை இகழ்ந்து பேசுவதுடன், இவர்களை எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நாங்கள் கோரவில்லை; அவர்களாக வாக்களித்தார்கள்; என எள்ளிநகையாடுவது. இப்படி கேவலப்படுவதற்காகத்தான் இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்களா? என்ற கேள்விகளுக்கு பதிலில்லை.

எத்தனை முரண்பாடுகள்.

தமது தலைவரை ஆளும் கட்சியும் இல்லாமல் எதிர்க்கட்சியும் இல்லாமல் தனி அணியாக இருந்து அரசியல்செய்ய தொலைக்காட்சிகளில் வந்து அழைப்பது. (ஏன் தொலைக்காட்சிகளில் அழைப்பு விடுக்கவேண்டும்? நேரடியாக ஏன் முடியாது?- என்பது வேறுகேள்வி) அரசின் “நல்ல விடயங்களுக்கு” ஆதரவாகவும் பிழையான விடயங்களுக்கு எதிராகவும் வாக்களிப்போம்; என கோரிக்கை விடுப்பது. கோட்பாட்டு ரீதியாக அதில் தவறேதும் இல்லை. ஆனால், எந்த இனவாத அரசியல் செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, எனக்கூறி 20 இன் பிரஜா உரிமை சரத்திற்கு ஆரவளிக்கப்பட்டதோ, அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தது; எந்த வகையில் “நல்லவிடயம்” என்று கூறுவதில்லை.

அவ்வாறாயின் இவர்களின் அகராதியில் நல்ல விடயம் என்பது எது? சிலவேளை, தனது தலைவரை எதிர்க்கட்சியிலிருந்தும் பிரித்து நடுரோட்டில் விடும்நோக்கமோ தெரியாது.

தேர்தலில் முழுக்க, முழுக்க மொட்டை விமர்சித்து, உரிமைக்கோசம் எழுப்பி வாக்குகளைப்பெற்றுவிட்டு, தமது ஊர்மக்கள் ஊர்ப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத்தான் தம்மைப் பாராளுமன்றம் அனுப்பினார்கள்; என்பது. அவ்வாறு கூறும்போது எந்தவொரு ஊரும் தனித்து எந்தக்கட்சியிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறமுடியாது; என்ற யதார்த்தத்தை மறந்துவிடுவது.

மட்டுமல்ல, ஜனாதிபதித் தேர்தலை வென்ற மொட்டே பொதுத்தேர்தலையும்; வெல்லும் என்று தேர்தலின்போதே தெரியும். அப்படியிருந்தும் மொட்டை விமர்சித்ததேன்? அப்பொழுது இப்போது பேசும் மொட்டுக்கு ஆதரவாக பேசும் தத்துவங்களை ஏன் பேசவில்லை; என்ற கேள்விக்கும் பதிலில்லை.

அவ்வாறு ஆதரவளித்து இதுவரை சாதித்தது எதை?
ஜனாசா எரிப்பைத் தடுக்கமுடியவில்லை. ஜெனீவாவே தடுத்தது.

தனது தலைவரை 100 நாட்களாகியும் விடுதலை செய்யமுடியவில்லை.

இதுவரை சாதித்தது என்ன? சாதிக்கப்போவதென்ன?

சரி, இவை எல்லாவற்றையும் தாண்டி அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் ஆதரவளியுங்கள். ஆனால் நடிக்காதீர்கள். நடித்தாலும் அந்த நடிப்பிற்கு தங்கமுலாம் பூசாதீர்கள்.

பாரிற்கு (Bar) போய் வந்தால் நேர்மையாக பாரிற்கு போய் வருகிறேன்; என்று கூறுங்கள். முதலாவது வகைக்குள் வருவீர்கள். அல்லது மௌனமாகவாவது இருங்கள். இரண்டாவது வகைக்குள் வருவீர்கள்.

தயவுசெய்து பாரிற்குப் போய்வந்துவிட்டு, பள்ளிக்குப் போய் வந்ததாக கூறாதீர்கள். “மணம்” காட்டிக் கொடுத்துவிடும்.

வை எல் எஸ் ஹமீட்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading