நட்டத்தில் இயங்கும் விமான சேவைக்கு எதற்கு புதிய விமானங்கள்?

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதன்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, நிறுவனமொன்று வீழ்ச்சியடைந்ததன் பின்னர் அதனை மறுசீரமைக்க முடியாது. இது வரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானங்களின் வரி காலம் நிறைவடைந்தால் , அதன் பின்னர் மறுசீரமைக்க முடியாது.
எனவே நிறுவனமொன்றை நிர்வகித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கமையவே புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
