நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது ‘ஹன்சார்ட்’! – மஹிந்த தரப்புக்கு மேலும் சிக்கல்
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசைப் பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த 14ஆம் திகதியும், 16ஆம் திகதியும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யும் நாடாளுமன்றப் பதிவேடு (ஹன்சார்ட்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் மஹிந்த தரப்புக்கு மேலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசின் மீது நம்பிக்கையில்லை என்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றப் பதிவேட்டின்படி பிரதமர், அமைச்சர்கள், சபை முதல்வர், அரச தரப்பு பிரதம கொறடா என எவரும் இல்லை என்ற நிலை உறுதியாகியுள்ளது.
இந்த நாடாளுமன்றப் பதிவேட்டை முன்வைத்து சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
