நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிரான கிரிஷ் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
நாமலுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று (27) காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக கூறி இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னலையாகியிருந்தார்.
அத்துடன், இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளர் வழங்கிய வாக்குமூலத்தில் பாதி மாத்திரமே தன்னிடம் உள்ளதாகவும் எனவே முதலாவது சாட்சியாரின் முழுமையான வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாமல் ராஜபக்ச சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.