Local

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, இதன்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு குறிப்பாக கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாளை இந்தப் பொலிஸ் பிரிவுகளில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறும் என்பதுடன், கடும் நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தேவைக்கேற்ப பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல் – என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை, மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்ல முடியும்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பால் செல்ல முடியும்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பயணித்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கியோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற முடியும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது கொழும்பு நகரின் நடைபாதைகளிலோ அல்லது பிரதான வீதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு சுமார் 5,900 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading