நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் தொடர்பான விசேட கூட்டம்!





இம்முறை நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெறும் பெருநாள் விழா தொடர்பான விசேட கூட்டம் கடந்த 2023.04.05ஆம் திகதி கல்பிட்டி பிரதேச சபைக் கட்டிடத்தில் புத்தளம் மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமனாயக அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கூட்டத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முப்படைகளின் பிரதாணிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இவ்வருடம் கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளிக்கிழமை, பௌத்த சமயத்தினரின் வெசக் பண்டிகை, தமிழ் சிங்கள புத்தாண்டு, மற்றும் நோன்புப் பெருநாள் போன்ற நிகழ்வுகள் வரிசையாக இடம்பெறவுள்ளது. இம்முறை கொண்டாடப்படும் வெசக் பண்டிகை அரசாங்கத்தின் திட்டமிடலின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்க்கது.
அந்த வகையில் புத்தளம் தொகுதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை எல்லா இன மக்களின் ஒத்துழைப்புடன் புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. எச். எம். எஸ். பி. ஹெரத் அவர்களின் தலைமையில் நடத்துவதற்கு புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்குழுவில் ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது .
அந்த வகையில் கல்பிட்டி நகரம் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கைகளும் இடம்பெறவுள்ளதுடன் நுரைச்சோலையில் பெருநாள் விளையாட்டு விழாவும் நடைபெற வுள்ளது. இதனை சிறப்பாக செய்து முடிப்பது தொடர்பாக பேசப்பட்டு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது. (படமும் தகவலும் எம்.எச்.எம் சியாஜ். கற்பிட்டி செய்தியாளர்)
