Local

பசியின் கொடுமையால் இறந்தவரின் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற தன்னார்வலர்

தெலங்கானாவில் பசியின் கொடுமையால் இறந்தவரின் சடலத்தை துணியில் சுற்றி தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளை தன்னுடைய கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் அல்லாமல், சாதாரண மனிதர்களில் காணப்படும் மனித நேயத்தையும் படுகொலை செய்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள காமாரெட்டி மாவட்டத்தில் சம்பவம் நடைபெற்று உள்ளது. காமாரெட்டி நகர் ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து தனியாக வசித்து வந்தவர் மஹா ராஜூ வெங்கடராஜூ. ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் வேலை கிடைக்காமல் திண்டாடிய வெங்கடராஜூ, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் பசிக்கொடுமையால் இருந்தவர் சாலையோரத்தில் படுத்த நிலையில் நேற்று  பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த காமாரெட்டி போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தனியார் வாகனம்  மூலம் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் எடுத்த முயற்சிக்கும் கொரோனா அச்சம் காரணமாக பலன் கிடைக்கவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் ரயில்களில் அநாதையாக மரணம் அடைந்த நபர்களின் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்யும் ராஜூ என்பவரின் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து அவர் வெங்கடராஜூவின் சடலத்தை ஒரு துணியில் சுற்றி சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கொரோனா வைரஸ் மனிதர்களை கொலை செய்யும் நிலையில், இதன் காரணமாக  மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் மனிதநேயத்தையும் கொலை செய்துவிட்டது என்பதற்கு இந்த சம்பவமே.. ஒரு உதாரணம். மேலும், அனாதையாக சாவும் சடலங்களையும் எடுத்து சென்று அடக்கம் செய்யும் ராஜூ போன்றவர்களின் மனிதநேயத்தை எந்த வைரசாலும் அசைக்க கூட இயலாது என்பதற்கும் இதுவே ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading