Local

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய பிடியாணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் முன்னிலையாகாமை காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பசில் ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதனால் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என வைத்திய அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தனர்.

எனினும், பசில் ராஜபக்ஷ தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதனால், முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading