போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் முடக்கம்
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சொத்துக்களை முடக்குவதற்கு (செயலிழக்கச் செய்வதற்கு) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சில சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட, தொட்டலங்க பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1.30 பேர்ச் காணி மற்றும் 0.75 பேர்ச் காணியுடன் கூடிய மூன்று மாடி வீடு ஆகியன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சொத்துக்கள் தொடர்பான முடக்கக் கட்டளையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீடித்து அமுல்படுத்தியுள்ளதுடன், இன்று (05) முதல் 07 நாட்களுக்கு இந்த முடக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You must be logged in to post a comment.