மட்டு. மாவட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் செயலமர்வு புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 150 பள்ளிவாசல்களில் இருந்து 450 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை மற்றும் இலங்கை வக்பு நியாய சபை ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
இக் கருத்தரங்கில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக வளவாளர்களாக அதன் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹ்மத், வக்பு பிரிவின் அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ.முனீர், வக்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஜாவித், வக்பு நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன் ஆகியோரும் மேலும் சிறப்பு வளவாளர்களாக ரிஸ்வி மஜீதி மற்றும் அஷ்ஷேக் நுஸ்ரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இச் செயலமர்வை எதிர்வரும் காலங்களில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்த முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.