Lead NewsLocal

முன்னாள் ஜனாதிபதிக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சமர்ப்பித்த 12 மனுக்களின் தீர்ப்பை அறிவித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்த 12 அடிப்படை உரிமை மனுக்கள் நந்தன சிறிமான்ன, தனது இரண்டு பிள்ளைகள் குண்டுத் தாக்குதலில் இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா வர்த்தகரான ஜனத் விதானகே, சரத் இத்தமல்கொட உட்பட மூன்று கத்தோலிக்க தந்தைகள், ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading