மேல்நீதிமன்றில் மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும், குற்றவியல் கவனக்குறைவு காரணமாக கடமையைச் செய்யத் தவறியமை குறித்த விசாரணை மீண்டும் 2025 ஜூலை 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் மூவர் கொண்ட நீதிமன்றம் இதற்கான திகதியை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்ற போதே இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு, ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை விடுதலை செய்ய முன்னர் உத்தரவிட்டிருந்தது.
புதிய விசாரணை
இருப்பினும், சாட்சிகளை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கான மேல் நீதிமன்றத்தின் முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனையடுத்து, மேல்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்றம் சாட்சிகளை அழைத்து இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன்னர், புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையிலேயே குறித்த இருவருக்கும் எதிராக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You must be logged in to post a comment.