ரணிலுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) கருத்து வௌியிட்டிருந்த நிலையில், அதன் ஊடாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தலையிட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் வௌியிட்ட கருத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.