Local

ரணில் இல்லாவிட்டால் மீண்டும் வரிசை யுகம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவை என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படக்கூடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக பிறிதொரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்தால் தங்களின் முடிவு எவ்வாறு அமையும் என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதோ வேட்பாளராக வரமாட்டார். மக்கள் வேட்பாளராகவே களமிறங்குவார்.

கட்சி ரீதியாகப் பிளவுபட்டு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இன்று நாடு இல்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை மீட்பதற்குரிய வேலைத்திட்டம் இல்லை. தேசிய மக்கள் சக்தியிடமும் இல்லை.

எனவே, ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டை அழிவு திசையை நோக்கிக் கொண்டு செல்லும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்காது என நம்புகின்றேன். இந்த நாட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆள வேண்டும்.

இந்த அரசில் உள்ள பங்காளிக் கட்சிகள் தமது அடையாளத்தையும் பாதுகாத்துக்கொண்டே செயற்படுகின்றன. ஜனாதிபதி அதற்கு ஒருபோதும் இடையூறு ஏற்படுத்தியது கிடையாது.

எனவே, ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் உள்ள பெரும்பாலானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற முடிவிலேயே உள்ளனர்.” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading