Sports

லங்கா பிறீமியர் லீக் 2026: கொழும்பு கேப்ஸின் புதிய உரிமையாளராக Witness Sports Alliance நிறுவனம் அறிவிப்பு

 

கொழும்பு, இலங்கை (18 மே 2026): லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 6ஆவது அத்தியாயத்திற்கு முன்னதாக, கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps) அணியின் உரிமத்தை ‘விட்னஸ் ஸ்போர்ட்ஸ் அலையன்ஸ் எல்.எல்.சி’ (Witness Sports Alliance) நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. சாரண்யன் பழனிசாமி மற்றும் கே.சி. ஷியாம் காங்கயன் ஆகியோரால் வழிநடத்தப்படும் இந்த நிறுவனத்தின் கீழ் கொழும்பு கேப்ஸ் அணி, இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடரில் களமிறங்கும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான லங்கா பிறீமியர் லீக் தொடரில் பங்கேற்க கொழும்பு கேப்ஸ் தயாராகி வரும் வேளையில், இந்த நிர்வாக மாற்றம் அணியின் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கொழும்பு நகரின் விளையாட்டு ஆற்றலையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் வகையில், ரசிகர்களைக் கவரும் வணிக ரீதியான மற்றும் போட்டித்திறன் மிக்க ஒரு அணியை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என புதிய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை லங்கா பிறீமியர் லீக்கில் கொழும்பு கேப்ஸ் அணியை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை அணியின் நட்சத்திர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோரை அந்த அணி முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ளது. சர்வதேச அனுபவமிக்க இந்த இரண்டு உள்ளூர் வீரர்களின் வருகையானது அணிக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. சர்வதேச அனுபவமும், ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனும் கொண்ட இவ்விரு வீரர்களும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உரிமையாளர்களை வரவேற்றுப் பேசிய லங்கா பிறீமியர் லீக்கின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல, லங்கா பிறீமியர் லீக்கின் 6ஆவது அத்தியாயத்திற்காக கொழும்பு கேப்ஸ் அணியின் புதிய உரிமையாளராக விட்னஸ் ஸ்போர்ட்ஸ் அலையன்ஸ் எல்.எல்.சி நிறுவனத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. கொழும்பு என்பது கிரிக்கெட்டின் முக்கிய மையமாகும். மேலும் இந்த லீக்கின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க இத்தகைய அர்ப்பணிப்புள்ள உரிமையாளர்கள் முன்வந்திருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்று கூறினார்.

இது குறித்து ஐபிஜி குளோபல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில், கொழும்பு கேப்ஸ் அணி லங்கா பிறீமியர் லீக்கிற்கு கூடுதல் பலத்தையும், விறுவிறுப்பையும் சேர்க்கிறது. அர்ப்பணிப்புள்ள புதிய நிர்வாகம் மற்றும் வலுவான உள்ளூர் வீரர்கள் ஏற்கனவே அணியில் இணைந்துள்ள நிலையில், ஒரு போட்டித்திறன் மிக்க அணியை உருவாக்குவதற்கும், உயர்தர கிரிக்கெட், ரசிகர்களின் ஈடுபாடு மற்றும் வணிக வாய்ப்புகளை மையமாகக் கொண்ட ஒரு பருவகாலத்திற்கு பங்களிப்பதற்கும் இந்த அணி சிறந்த நிலையில் உள்ளது.” என்றார்.

இதனிடையே, ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவது, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மற்றும் லங்கா பிறீமியர் லீக் தொடரில் நீண்டகால மதிப்பை உருவாக்குவது ஆகியவற்றுடன், ஒழுக்கமான மற்றும் நவீனத்துவமிக்க ஒரு அணியை உருவாக்குவதே தங்களது முதன்மை நோக்கம் என்று அணியின் புதிய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading