Local

வரவு – செலவுத் திட்டம் எப்படி சமர்பிக்கப்படும்?

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2025 ஜனவரி 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு-செலவுத்திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading