World

வீட்டு வேலை செய்த பெண் சட்டமன்ற உறுப்பினரானார்…!!!

 

அரசியலில் பணம் இருப்பவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற எழுதாத விதியைத் தவிடுபொடியாக்கி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆஸ்கிராம் (Ausgram) தொகுதியில் சாதாரண வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்கிராம் பகுதியைச் சேர்ந்த கலிதா மஜ்ஹி, கடுமையான நிதி நெருக்கடி காரணமாகத் தனது கல்வியைத் தொடர முடியாமல் போனது.

இதனால், குடும்பத்திற்குப் பொருளாதார உதவிகள் செய்ய பல வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார். இவரது கணவர் குழாய் பொருத்துநராக கடமையாற்றியவர்.

இவர்களுக்கு பார்த் என்ற 8ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இவ்வளவு வறுமையிலும், குடும்பச் சுமையைத் தாங்கிக்கொண்டே கலிதா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

இவர் பா.ஜ.ககட்சியின் பூத் மட்டத்திலிருந்து அடிமட்டத் தொண்டராக தனது அரசியல் பணியைத் தொடங்கினார்.

இவரது சிறப்பான செயல்பாட்டைக் கவனித்த பா.ஜ.க., 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பளித்தது. அப்பொழுது 41 சதவீத வாக்குகள் பெற்ற போதிலும், அவர் தோல்வியைச் சந்தித்தார்.

கலிதா மீது நம்பிக்கை வைத்த கட்சி மேலிடம், தற்போதைய தேர்தலில் மீண்டும் வாய்ப்பளித்தது. அதில் அவர் 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கலிதா மஜ்ஹி தனது வேட்புமனு தாக்கலின்போது, தன்னிடம் மொத்தம் ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையான பின்னணியைக் கொண்டிருந்தாலும், மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர் சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading