ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் தொடரும் நெருக்கடி
விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
எஸ்.ஐ. இமாம் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்
ரோஹினி மாரசிங்க – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்
ஐரங்கனி பெரேரா – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்
ஆகியோரே புதிய குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் முக்கிய பொறுப்புகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சுயாதீன குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல், மோசடி, முறைகேடுகள் மற்றும் தோல்விகள் குறித்து ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்து அதற்கான மூலோபாய வழிமுறைகளைத் தயாரிப்பதே பரிந்துரைகளாகும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவலகப் பொறுப்பாளர்களை நீக்குவது தொடர்பான கூட்டுப் பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை (நவம்பர் 09) விவாதிக்கப்படவுள்ளது.
இதன்படி, குறித்த கூட்டுப் பிரேரணை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மாலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளதாக ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில், இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டு சபையின் நிர்வாகம் ரத்துசெய்யப்பட்டு இடைக்கால குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த இடைக்கால குழுவின் தலைவராக முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்தார். என்றாலும், இந்த குழு செயல்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது. இதன் காரணமாக அர்ஜுன ரணதுங்க, இடைக்கால குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இதனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
