Lead NewsLocalWorld

அசுர வேகத்தில் கொரோனா! 107 பேர் பலி!! 100,000 பேர் பாதிப்பு!!!

* கண்ணீர்க் கடலில் சீனா
* மேலும் 17 நாடுகள் பாதிப்பு
* இலங்கை மீனவர்கள் 6 பேருக்குத் தொற்று எனச் சந்தேகம்

சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 என்று அந்த நாட்டு அரச தகவல்கள் தெரிவித்தன. எனினும், அங்கு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த நாட்டு உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நோய்த் தாக்கத்தால் சீன நாட்டு மக்கள் கதறியழும் காணொளி காட்சிகள் வெளியாளியுள்ளன.

அதேவேளை, சீனாவுக்கு வெளியே இலங்கை உட்பட மொத்தம் 17 நாடுகளில் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து – 8 பேர் பாதிப்பு
ஹொங்ஹொங் – 8 பேர் பாதிப்பு
அமெரிக்கா – 7 பேர் பாதிப்பு
ஆஸ்திரேலியா – 7 பேர் பாதிப்பு
தைவான் – 7 பேர் பாதிப்பு
சிங்கப்பூர் – 7 பேர் பாதிப்பு
ஜப்பான் – 5 பேர் பாதிப்பு
மக்காவோ – 5 பேர் பாதிப்பு
தென் கொரியா – 5 பேர் பாதிப்பு
மலேசியா – 4 பேர் பாதிப்பு
பிரான்ஸ் – 3 பேர் பாதிப்பு
வியட்நாம் – 3 பேர் பாதிப்பு
கனடா – 2 பேர் பாதிப்பு
கம்போடியா – ஒருவர் பாதிப்பு
நேபாளம் – ஒருவர் பாதிப்பு
ஜேர்மனி – ஒருவர் பாதிப்பு
இலங்கை – ஒருவர் பாதிப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கொரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்தப் புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இது மிதமான நிலையிலேயே உள்ளது” என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், சீனாவில் மட்டும் 107 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை இன்று ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் சீனத் துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.அவர்கள் இலங்கை திரும்ப முன்னர் மருத்துவ பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி வைரஸ் தோற்றிய நிலையில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்மணி இலங்கையில் நடமாடிய பகுதிகள், தங்கியிருந்த ஹோட்டல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சுகாதார அமைச்சு அப்பகுதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading