Lead NewsLocal

அரசியல் மாற்றத்துக்காகவே ஈஸ்டர் தினமன்று தாக்குதல்! – தயாசிறி பரபரப்பு சாட்சியம்

“இலங்கையில் அரசியல் மாற்றத்துக்காக வெளிநாட்டு சக்திகளினால் சஹ்ரானும் அவரது சகாக்களும் பயன்படுத்தப்பட்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். அதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்திருந்தனர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று புதன்கிழமை சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் குண்டுத் தாக்குதல் நடக்கப் போவதாக அறிந்திருந்தனர் எனக் கூறுகின்றனர். உண்மையில் நாங்கள் அது பற்றி அறிந்திருக்கவில்லை. இது முற்றிலும் பொய்யானது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடக்காதது தொடர்பில் சந்தேகம் இருக்கின்றது. அந்தக் ஹோட்டலில் அதிதிகள் இருந்தார்களா என்பது குறித்த எனது சந்தேகத்தை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்த விடயத்தில் மக்களுக்கும் சந்தேகம் இருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தினம் இலங்கையில் மூன்று ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இந்த மூன்று ஹோட்டல்களில் மட்டும் ஏன் குண்டுகள் வெடித்தன என்ற காரணத்தையும், ஏனைய ஹோட்டல்களில் ஏன் குண்டுகள் வெடிக்கவில்லை என்ற காரணத்தையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு கண்டறிய வேண்டும்.

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்காதது குறித்து சரியாகத் தேடிப் பார்க்கவில்லை.
இந்தக் ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்படாமைக்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.

இலங்கையில் அரசியல் மாற்றத்துக்காக வெளிநாட்டு சக்திகளினால் சஹ்ரானும் அவரது சகாக்களும் பயன்படுத்தப்பட்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading