Lead NewsLocal

கட்சி யாப்புக்கு அமைய நானே வேட்பாளர்! – ரணில் விடாப்பிடி

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்.”

– இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும் எமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தவுள்ளேன்.

எனது வேண்டுகோளையும் மீறி தனிநபர்கள் பொதுவெளியில் பிரசாரக் கூட்டம் நடத்துகின்றனர். இது கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் குழப்பங்களை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் எமது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” – என்றார்.

இதேவேளை ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டபோது, “ரணில் விக்கிரமசிங்க வேட்பாளர் என்று இணையத்தளங்களில்தான் செய்திகள் வந்திருக்கின்றன. கட்சியில் யாரும் இன்னும் அவ்வாறு சொல்லவில்லை. நாளை ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்த பிரதமர் அழைத்துள்ளார். நான் பேச்சுக்குச் செல்வேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading