FeaturesLead NewsLocal

கோட்டா வந்தால் இரத்த ஆறு ஓடும்! – தமிழ், முஸ்லிம் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் என்கிறார் சஜித்

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும். எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியில் ‘தமிழ்க் கட்சிகள் எனக்கு ஆதரவு வழங்காவிட்டாலும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வேன்’ என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பலவிதமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இப்படிப்பட்டவருக்கா தமிழர்கள் வாக்களிப்பார்கள்?

ராஜபக்ச குடும்பமானது குடும்ப ஆட்சியூடாக மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கவே விரும்புகின்றது. அதனால்தான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பம் களமிறக்கியுள்ளது. இது தமிழ்க் கட்சிகளுக்கு நன்கு தெரியும். எனவே, தமிழ்க் கட்சிகள் கோட்டாபயவை ஆதரிக்க முடிவெடுக்கமாட்டார்கள்.

கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும். அதில் சந்தேகப்படத் தேவையில்லை. அதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வை வழங்குவதே எனது குறிக்கோள். தமிழ், முஸ்லிம் மக்கள் என்னை நம்பி ஆதரிக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாக்குகளை எனக்கு வழங்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading