Local

தலவாக்கலையில் மண்சரிவு! ஒருவர் பலி; இருவர் படுகாயம்!!

தலவாக்கலை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு பின் புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

05.05.2019 அன்று மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் வங்கிக்கு பின்புறமாக மதில் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கும் பணியில் 20 பேர் ஈடுப்பட்டிருந்ததுடன், இதில் மூவர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டுள்ள சக பணியாளர்கள், முதலில் இருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது சற்று நேரத்திற்கு பின்பாக மீட்கப்பட்ட ஒருவரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.என்.ஜெயரத்ன வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட இவ் மூவரையும் அப்பகுதி பொது மக்கள் இராணுவத்தினர், தலவாக்கலை பொலிஸார் ஆகியோர் பணியில் ஈடுப்பட்டு மீட்டமை குறிப்பிடதக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading