ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – தயாசிறி கூறுகின்றார்
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கும் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் தொடர்புள்ளது என ரஞ்சன் ராமநாயக்க தமது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்முறைச் சம்பவங்களின்போது பொலிஸாருக்கும் கலகக்காரர்களுக்கும் இடையே ஏற்பட இருந்த மோதலை நான் தடுத்துநிறுத்தினேன்.
இதற்காகவே நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். பொலிஸாரின் தீர்மானத்துக்கமைய சந்தேகநபர்களுக்குப் பிணையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.
இதனைத் திரிபுபடுத்தி ரஞ்சன் ராமநாயக்க என் மீது பலி சுமத்தியமைக்கு நீதிமன்றத்தின் ஊடாக நியாயத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளேன்” – என்றார்.
எனினும், தயாசிறி ஜயசேகர மீதான குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று அவரிடம் மூன்றரை மணிநேர விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

