ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ரிஷாத்துக்குத் தொடர்பு இல்லை! – தெரிவுக்குழுவுக்கு அறிவித்தார் பதில் பொலிஸ்மா அதிபர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எழுத்துமூலமாகத் தகவல் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியம் அளித்தார்.
அவரின் சாட்சியத்தையடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி, பதில் பொலிஸ்மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு – உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷாத் பதியுதீனுக்குத் தொடர்பில்லை என்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாகக் கூறியதுடன் அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.

