Lead NewsLocal

புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டினோம்! – எமது திட்டம் நிறைவேற அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்கிறார் சம்பந்தன்

“ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசின் ஊடாக புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதே எமது குறிக்கோளாக இருக்கின்றது. இதற்காகவே மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ‘ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியை’ நாம் ஓரணியில் நின்று தோற்கடித்தோம். நாட்டில் 50 நாட்கள் நீடித்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டினோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதே எமது திட்டம்.

இந்தத் திட்டம் நிறைவேற அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு நிபந்தனைகளை முன்வைக்காமல் நாம் ஆதரவு வழங்கவில்லை. அவர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தினோம். பல நிபந்தனைகளை முன்வைத்தோம். இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் ஆதரவு வழங்கினோம்.

புதிய அரசமைப்பு நிறைவேற்றம், ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை எனப் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி ஓர் இணைக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கினோம்.

இந்த அரசுக்கு நாம் ஆதரவு வழங்கினாலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே தொடர்ந்து செயற்படுவோம்.

நாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

அரசிடம் நாம் முன்வைத்த கோரிக்கைகளில் புதிய அரசமைப்பு விடயம் முக்கியம் பெறுகின்றது. இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று நாம் முழு மனதுடன் நம்புகின்றோம்.

இதை நிறைவேற்றியே தீருவேன் என்று ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உரையாற்றும்போதும் உறுதியளித்திருந்தார்.

எமது நடவடிக்கைளை நாம் மிகவும் நிதானமாக – நேர்த்தியாகக் கையாள்வோம். தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக எமது நடவடிக்கைகள் அனைத்தும் அமையும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading