இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் மன்னார் வளைகுடா..!!
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ‘Sri Lanka Licensing Round 2026’ சர்வதேச உரிமச் செயல்முறை உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி மன்னார் வளைகுடாவில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 4 ஆழ்கடல் மண்டலங்கள் (Offshore Blocks) சர்வதேச சக்திவாய்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஏலத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை சர்வதேச சந்தையில் விளம்பரப்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ கூட்டாளராக பிரிட்டனின் ‘பிரான்டியர் எனர்ஜி நெட்வொர்க்’ (Frontier Energy Network) நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்பகுதியில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ‘டொராடோ’ (Dorado) மற்றும் ‘பராகுடா’ (Barracuda) ஆகிய இயற்கை எரிவாயு வைப்புகளில் சுமார் 839 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்து, 2032 ஆம் ஆண்டளவில் வணிக ரீதியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை இலங்கையில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.