நீரில் தத்தளிப்பவரை காப்பாற்ற பறந்து வரும் லைஃப் பாய்!
சீனாவில் ஒரு அசத்தலான கண்டுபிடிப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. தண்ணீரில் சிக்கிக் கொள்பவர்களை வேகமாக சென்று காப்பாற்றுவதற்காக AI தொழில்நுட்பத்தில் இயங்கும் பறக்கும் மீட்பு ரோபோட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த சோதனை ஜெஜியாங் மாகாணம், ஹாங்சோ நகரில் உள்ளூர் காவல்துறை நடத்திய நீர் மீட்பு ஒத்திகையின் போது நடந்தது. கரையில் இருந்து ஆரஞ்சு நிற லைஃப் பாய் போல இருக்கும் அந்த கருவி தானாகவே மேலே எழும்பி, நீரில் இருந்த நபரை நோக்கி பறந்து சென்றது.
அருகில் சென்றதும் தண்ணீரில் இறங்கி, தனது விசிறிகளை நிறுத்திக் கொண்டது. பிறகு அந்த நபர் அதை பிடித்துக் கொண்டு, அதன் மீது ஏறி பாதுகாப்பாக இருக்க முடிந்தது. மீட்புக் குழுவினர் வரும் வரை அது நீரில் நிலையாக மிதந்து கொண்டிருந்தது. நபரை காப்பாற்றிய பிறகு, மீண்டும் தானாகவே பறந்து சென்று புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது.
இதன் சிறப்பு என்னவென்றால், இதை யாரும் ரிமோட் மூலம் இயக்க வேண்டியதில்லை. தானாகவே வழியை கண்டுபிடித்து, ஆபத்தில் இருப்பவரை நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் உயிர்களை காப்பாற்ற பெரிதும் உதவும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அவர்கள் ஆகஸ்ட் 14 அன்று குறிப்பிட்டுள்ளார். இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் மீட்பு பணிகளை இன்னும் வேகமாக்கும்.
தகவல்: Hangzhou authorities & Global Times

You must be logged in to post a comment.