Local

இலங்கை சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது. நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 1,800-க்கும் அதிகமான குறுகிய காலக் கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே நேற்று பிற்பகல் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்தமை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பின்னர், சிறைச்சாலையின் பெண் மற்றும் ஆண் கைதிகள் சிலர் அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்கிருந்து கீழே விழுந்த நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த நேற்று இரவு பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

சிறைச்சாலைக்குள் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை வைத்தியசாலையை உடைத்து மருந்துகளைக் கொள்ளையடித்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அங்கிருந்த உடற்பயிற்சிக் கூடத்தின் கதவுகளை உடைத்து, அங்குள்ள இரும்புத் தடிகளையும் வன்முறைச் செயல்களுக்காக அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சூழலில் கைதிகள் ஆயுதங்களைக் கவர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நள்ளிரவிலேயே ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இன்று அதிகாலை அமைதியாக இருந்த கைதிகள், காலையில் மீண்டும் திட்டமிட்டபடி சிறைச்சாலை அதிகாரிகளை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, அவர்களின் அலைபேசிகளைப் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கடுமையான சிறைக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதல் ஏற்பட்ட சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த மோதலை சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவரே வழிநடத்தியதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர் ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஆவார். கூரிய ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.

 

2016-ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி, கட்டிவைத்துவிட்டு, தூபிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இவர் மீது வழக்கு உள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர் தற்போது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading