World

ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரம்! ஹோர்முஸ் நீரிணை மூடல்..!!

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்: கப்பல்கள் மீது தாக்குதல்… ஹோமுஸ் நீரிணை மூடல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானுடன் தொடர்புடைய இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்த முடியாதவாறு அழித்துள்ளதாகவும், ஓமன் வளைகுடா பகுதியில் இருந்த மற்றொரு எண்ணெய் தாங்கிக் கப்பலை முழுமையாக அழித்துள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையம் அமைந்துள்ள கார்க் தீவுக்கு (Kharg Island) அருகில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும், அந்தத் தாக்குதல்களைத் தம்மால் தடுக்க முடிந்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஈரானிய அரச ஊடகம், அமெரிக்காவுடன் தொடர்புடைய 3 கப்பல்கள் மீதும், ஹோமுஸ் நீரிணை வழியே “அனுமதியின்றி” பயணித்த மேலும் 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதும் தாம் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் இருந்தவர்கள் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20% இடம்பெறும் ஹோமுஸ் நீரிணை, தற்போதைய போர்ச் சூழல் காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வேகமாக உயர்ந்து வருகின்றது.

ஈரான் தமது கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அழிப்போம் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போதைய இந்த மோதல் சூழ்நிலையை ஒரு “சிறிய விடயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading