உளவு பார்க்க AI கரப்பான் பூச்சிகள்!!
உளவு பார்க்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் கரப்பான் பூச்சிகள்! ஜெர்மனியின் அதிரடி முயற்சி
ட்ரோன்கள், ரோபோக்கள் மற்றும் மனிதர்களால் நுழைய முடியாத இடங்களுக்குச் சென்று உளவு பார்க்க, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ‘பயோ-ஹைப்ரிட்’ கரப்பான் பூச்சிகளை ஜெர்மனி சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயிரினங்களின் உடலில் நுண்செயலிகள் (Microchips), சிறிய கேமராக்கள் மற்றும் வெப்ப உணர்விகள் பொருத்தப்பட்டு, அவை நடமாடும் உளவு சாதனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு இம்ப்ளான்ட்டுகள் மூலம், இயக்குபவர்கள் அவற்றை விரும்பிய திசையில் செலுத்த முடியும். கதவுகளின் இடுக்குகள், சிறிய விரிசல்கள் மற்றும் ஏர் வென்ட்கள் வழியாக இவை எளிதாக ஊடுருவி, அங்கு நடப்பவற்றை வீடியோ மற்றும் ஆடியோவாக நேரலையில் ஒளிபரப்பும் திறன் கொண்டவை.
இந்த பூச்சிகளில் உள்ள ஏஐ தொழில்நுட்பம், அவை தடைகளைத் தாண்டிச் செல்லவும், சென்ற இடத்தின் வரைபடத்தை உருவாக்கவும் உதவுகிறது. மற்ற உளவு கருவிகளைப் போலன்றி, இவை மிகச்சிறிய அளவில் இருப்பதால், யாராலும் கண்டறியப்பட வாய்ப்பு மிகக் குறைவு என்பது இதன் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்கள், சுரங்கங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் ‘தேடுதல் மற்றும் மீட்பு’ பணிகளுக்காகவே இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது இது ராணுவம் மற்றும் உளவுத்துறையின் முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உயிருள்ள ஒரு பூச்சியை உளவு கருவியாக மாற்றுவது, கண்டுபிடிப்புக்கும் சுரண்டலுக்கும் இடையிலான கோட்டைத் தகர்ப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். உயிரியல் ரீதியாக ஒரு உயிரினத்தைக் கட்டுப்படுத்தி அதை ஆயுதமாகப் பயன்படுத்துவது அறநெறிகளுக்கு எதிரானது என்பது இவர்களின் முக்கிய வாதமாக உள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர, செயற்கை நுண்ணறிவு உயிரினங்களின் உடலுக்குள் புகுந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது சரியா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஒரு உயிரினத்தின் சுதந்திரத்தை இயந்திரங்கள் தீர்மானிக்கும் இந்த முறை, எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இன்னும் விடை தெரியாத ஒன்றாகவே உள்ளது.

You must be logged in to post a comment.