Cinema

ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு

ஒஸ்கார் விருது வென்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பொலிவூட் திரையுலகில் நிலவும் “மத ரீதியான பாகுபாடு” (Communal bias) காரணமாகத் தான் சில வாய்ப்புகளை இழந்திருக்கலாம் என்று தெரிவித்த கருத்து, இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்ற 59 வயதான ஏ.ஆர். ரஹ்மான், பிபிசி ஆசிய வலையமமைப்பிற்கு (BBC Asian Network) வழங்கிய நேர்காணலில் இக்கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் இப்போது முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளனர். எனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் ‘சீன கிசுகிசு’ (Chinese whispers) போல கைநழுவி வேறு ஐந்து இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது மத ரீதியான காரணமாகவும் இருக்கலாம், ஆனால் அது நேரடியாக என் முகத்திற்கு முன்னால் சொல்லப்படுவதில்லை” என்று குறிப்பிட்டார்.

ரஹ்மானின் இந்தக் கருத்துக்கு வலதுசாரி அமைப்புகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விசுவ இந்து பரிஷத் (VHP) அமைப்பைச் சேர்ந்த வினோத் பன்சால், ஏ.ஆர். ரஹ்மான் நாட்டை அவதூறு செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வலதுசாரி விமர்சகர்கள் ரஹ்மானின் தேசபக்தி மற்றும் திறமையை கேள்விக்குட்படுத்தி, அவர் “பாதிக்கப்பட்டவர்” (Victim card) போல நடிக்கிறார் என விமர்சித்துள்ளனர்.

விமர்சனங்கள் தீவிரமடைந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நோக்கம் எப்போதும் இசை மூலம் மக்களை உயர்த்துவதும், கௌரவிப்பதுமே தவிர யாரையும் காயப்படுத்துவது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தான் இராமாயணம் (Ramayana) படத்திற்காக ஜேர்மனிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் சமீபகாலமாக நிலவும் மத சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொலிவூட் படங்களில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து இச்சம்பவம் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமீர் கான் மற்றும் ஷாருக் கான் போன்ற முன்னணி நடிகர்களும் சகிப்புத்தன்மையின்மை குறித்துக் கருத்துத் தெரிவித்தபோது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

தற்போது பொலிவூட் படங்களில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எதிர்மறையாக அல்லது வன்முறையாளர்களாகச் சித்தரிக்கப்படுவதாகத் திரை விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், தனது திரையுலகப் பயணத்தைத் தமிழ் சினிமாவிலேயே ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading