World

குடும்ப சண்டையால் 3 வயது சிறுவனை கொலை செய்த சிறுவர்கள்!

தமிழகத்தில் 3 வயது சிறுவனை இரண்டு சிறுவர்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன்- கவியரசி. இந்த தம்பதிக்கு 10 வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் உள்ளனர்.

பார்த்திபன் டிரைவராகவும், கவியரசி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அல்போன்சா, வீடு கட்டுவதற்காக வீட்டிற்கு பின்பக்கம் மணல் இறக்கி வைத்துள்ளார்.

இந்த மணலில் பார்த்திபனின் மகன் தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்திருந்த போது, இதை பார்த்த அல்போன்சா சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அல்போன்சாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இரு குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் 13 வயது மதிக்கத்தக்க பிரவீன்குமார், 11 வயது மதிக்கத்தக்க அஜய் இருவரும் சேர்ந்து பார்த்திபனின் மகன் தீனதயாளனை கடைக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பிறகு தீனதயாளனை காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அந்த புகாரின் பேரில் பொலிசார் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர்.

அதில், பிரவீன் குமார், அஜய் இரு சிறுவர்களும், குழந்தை தீனதயாளனை விஸ்வநத்தம் பகுதியில் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக அந்த கிணற்றிற்கு சென்று பார்த்த போது, கிணற்றில் சிறுவனின் சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதையடுத்து பொலிசார் அந்த இரண்டு சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading