Local

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.

2022 ஆம் ஆண்டில், நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில், சுகாதாரத் துறையின் ஏற்கனவே இருந்த கொள்முதல் நடைமுறைகளை மாற்றி, மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்து புதிய மருந்துகளை கொள்வனவு செய்தது.

இவ்வாறு கொள்வனவு செய்த மருந்துகளில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் காணப்பட்டதோடு, அதனை செலுத்திக்கொண்ட கண்டி, மாத்தளை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் மூவர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாகக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்தது.

பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.

தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த சுதத் ஜனக பெர்னாண்டோ, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா மற்றும் சுகாதாரத் துறையில் உயர் அதிகாரிகள் குழு ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இறுதியாக விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிட்டு தெரிவிக்கையில், தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு வருடம், 8 மாதங்கள் மற்றும் 6 நாட்களாக நடத்திய விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, 350 சாட்சிகளும் சுமார் 300 ஆவணங்களும் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading