Local

கொக்கிப்புழு நோய் தீவிரமானதால் கொழும்பில் 10 மாத குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், மூக்கு, வாய் மற்றும் ஆசனவாயிலிருந்து சுமார் இரண்டு அடி நீளமுள்ள பல கொக்கிப்புழு வெளிவந்த நிலையில், 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே, உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீரவால் குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கொக்கிப்புழு நோய் தீவிரமாக அதிகரித்ததால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் – கெமுனு லேன் பகுதியில் உள்ள முகமது அயூஃப் என்ற பத்து மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 5 ம் திகதி மதியம் குழந்தையின் வாயில் இருந்து சுமார் 2 அடி நீளமுள்ள ஒரு புழு வெளியேறுவதை குழந்தையின் தாய் அவதானித்துள்ளார்.

இதையடுத்து குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​குழந்தையின் மூக்கில் இருந்து மேலும் 2 அடி நீளமுள்ள இரண்டு புழுக்கள் வெளியே வந்துள்ளன.

இதையடுத்து, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை மலம் கழிக்கும் போது அவரது ஆசனவாயிலில் இருந்து இதுபோன்ற புழுக்கள் வெளியே வருவதை முன்பு பார்த்ததாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழந்தைக்கு, சரியான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்யவில்லை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நிலையில், குழந்தை கடுமையான கொக்கிப்புழு நோயால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தையின் மூக்கு, வாய் மற்றும் ஆசனவாயில் இருந்து சுமார் 2 அடி நீளமுள்ள கொக்கிப்புழுக்கள் வெளியேறுவது என்பது நம்பமுடியாதவை.

பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும் என கொழும்பு மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading