கொரோனாவால் பெருதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொரோனாவினால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளார்கள்.
கண்கள் எட்டும் தொலைவு வரை பென்சில்வேனியாவி கிரேட்டர் பிட்ஸ்பர்க் சமூகத்தினரின் உணவு வங்கியின் முன்னால் சுமார் 1000 கார்கள் வரை உணவுப்பொட்டலங்களுக்காக வரிசை கட்டி நின்ற காட்சி பலரையும் வேதனையடையச் செய்துள்ளன.
தங்களுக்குக் கிடைக்கும் சிறிய உணவு பங்குக்காக அங்கு சில வேளைகளில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளதாக உணவு வங்கி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 கோடியே 20 இலட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது. இதனையடுத்து உணவு அளிக்கும் அறக்கட்டளைகள் பசியாற உணவு அளித்து வருகின்றன.
ஆனால் ஒருநாள் கொரோனா கோரத்தாண்டவத்தினால் இந்த உணவு வங்கி முன்னால் சுனாமி போல் மக்கள் படையெடுக்கும் நிலை வரலாம் என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.
மார்ச்சில் மட்டும் பிட்ஸ்பர்க் கம்யூனிட்டி உணவு வங்கியில் உணவுப் பக்கெட்டுகளுக்கான தேவை 40% அதிகரித்துள்ளது.
இது போன்ற 8 மையங்களில் நாளுக்கு நாள் தேவை அதிகரிப்பினால் உணவுப்பற்றாக்குறை தோன்றிவிடும் நிலை உள்ளது.
“அதிகம் பேர் எங்கள் சேவையை முதல் முறையாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களெல்லாம் உணவு வங்கிக்கு முன்பின் வந்தவர்களல்ல” என்று உணவு வங்கி நிர்வாகி குலிஷ் என்பவர் தெரிவித்தார்.
எங்களிடம் 350 மையங்கள் இதே பென்சில்வேனியாவில் உள்ளன, இது பலருக்கும் தெரியாததால் ஒரே மையத்தில் மக்கள் குவிவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா முழுதும் நியூ ஆர்லியன்ஸ் முதல் டெட்ராய்ட் வரை சம்பளம் இல்லாத மக்கள் உணவு வங்கிகள் முன்னால் குவிந்து வருகின்றனர். சிறிய பங்குக்காக கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளும் சோகமயமான காட்சிகள் அங்கு தோன்றியுள்ளன.
ஏப்ரல் 9ம் திகதி டெக்ஸாசில் சான் ஆண்டனியோவில் மிகவும் சோகமயமான காட்சி நடந்தேறியது. ஒரு உணவு வங்கி முன்பாக 10,000 பேர் கார்களில் காத்திருக்க நேரிட்டது. சில குடும்பங்கள் இரவு முதலே அங்கு காத்திருக்கவும் செய்கின்றனர்.
