ஜாமியா நளீமிய்யாவின் பொன்விழா விசேட ஏற்பாடு!
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்று பிரபல கொடைவள்ளலும் சமூக சேவகருமான மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களால் 1973 ஆம் ஆண்டு பேருவளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜாமிஆவின் கல்வி பயணத்துக்கு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பொன்விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2023 ஜூன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளது பிரதிநிதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில், கடந்த வருடங்களில் ஜாமிஆ நளீமிய்யாவில் தமது ஏழு வருட கற்கை நெறியை நிறைவு செய்த சுமார் 240 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெறவிருப்பது விஷேட அம்சமாகும்.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய ஜாமிஆ நளீமிய்யா, கடந்த அரை நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கல்வித் துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. ஜாமிஆ நளீமிய்யா பட்டதாரிகளில் கணிசமான தொகையினர் அரச மற்றும் தனியார் துறைகளில் நிர்வாக பொறுப்புகளை வகித்து வருவதுடன் அவர்களில் சுமார் 25 க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
