Local

பசிலின் அமைச்சுப் பதவி கோரிக்கையை நிராகரித்தார் ரணில்!

தேசிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சுப் பதவிகளைக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்ஸ்தாபகர் பசில் ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனையை கொண்டு வந்த பசில் ராஜபக்ஷவிடம் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு கட்சி ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோரிக்கையை நிராகரித்த ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வாக்களித்தவர் தமக்கு உடனடியாக அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை
இதேவேளை, இம்முறை இராஜாங்க அமைச்சர்களின் அதிகார வரம்புகளை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்கலந்துரையாடலின் முடிவில் அடுத்த 15 நாட்களில் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் வாரத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading