Cinema

படத்துக்காக பல்லையே பிடுங்கிய நடிகர் சிவகுமார்!

தமிழ் சினிமாவின் பல்துறை நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். நடிப்பது மட்டும் அல்லாமல் இவர் ஒரு கை தேர்ந்த ஓவியரும் ஆவார். அதோடு சிறந்த மேடைப் பேச்சாளர் என்ற பரிணாமமும் கொண்டவர். அன்றிலிருந்து இன்று வரை தன் இளமையில் கொஞ்சம் கூட மாறாமல் என்றும் மார்க்கண்டேயனாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவக்குமார்.

நான்கு தலைமுறைகளாக இவரின் நடிப்பு நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இவர் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1965 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எந்த ஒரு கதாபாத்திரம் ஆனாலும் அதை மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்லக்கூடிய திறமை மிக்கவர் சிவக்குமார்.

இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது கந்தன் கருணை என்ற திரைப்படம். இந்த படத்தில் சிவக்குமார் முருகனாக வேடம் அணிந்து நடித்திருப்பார். அந்தப் படத்தை ஏபி நாகராஜன் இயக்கியிருந்தார் . அந்த சமயத்தில் சிவக்குமார் ஒரு வளரும் நடிகராக இருந்தபோதிலும் தனக்கு ஜோடியாக ஜெயலலிதாவையும் கே.ஆர். விஜயாவையும் இணைத்துக் கொண்டார்.

ஆனால் முதலில் ஏபி நாகராஜன் சிவகுமாரை வைத்து ஆடிசன் எடுத்தபோது சிறிது நாட்கள் காத்திருக்கவும் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். ஆனால் சிவக்குமார் காத்துக் கொண்டே இருக்க நடிகர் அசோகன் சிவக்குமாரிடம் “கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடிக்கிறாயாமே?” என கேட்டாராம் .அதற்கு சிவகுமார் “எங்க நானும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன், இன்னும் என்னை அழைக்கவே இல்லை” என்று மிகவும் வருத்தமாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகு பிரபல சினிமா தயாரிப்பாளரான ஏ எல் எஸ் வீரையன் சிவகுமாரிடம்” உன்னுடைய பல்லை காரணம் காட்டி தான் ஏபி நாகராஜன் தாமதப்படுத்திக் கொண்டு இருக்கிறார் .முன்னாள் துருத்தி கொண்டிருக்கும் அந்த சிங்கப்பல் முருகன் வேடத்திற்கு ஏற்றதாக இல்லையாம். அதனால்தான் இவ்வளவு தாமதப்படுத்துகிறார்” என்று சிவக்குமாரிடம் கூறி இருக்கிறார்.

உடனே சிவக்குமார் அந்த சிங்கப்பல்லை பிடுங்கிவிட்டு நேராக நாகராஜனிடம் “நீங்கள் அன்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதனால் அந்த பல்லை எடுத்து விட்டேன்” என்று அவரின் முன் போய் நின்றாராம். உடனே நாகராஜன் “நீதான் முருகன் “என்று அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா இயக்குனரான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading