Local

மத்தல விமான நிலையத்தை ஈர்க்க விஷேட சலுகை!

மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்க முடிவு செய்யும் விமான நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு திட்டமிடப்பட்ட விமானங்களைத் தொடங்கும் விமான நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனங்களுக்கு ஒரு சிறப்பு சலுகை தொகுப்பு வழங்கப்படும், விமானத்தை தரையிறக்குவதற்கும், விமானத்தை நிறுத்தி வைப்பதற்கும், அறவிடும் கட்டணத்திற்கான நிவாரணத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தின் சேவையை பெற்றுக் கொண்ட தினத்திலிருந்து நான்கு வருட காலத்திற்கு இந்த கட்டணத்திற்காக விசேட கழிவு வழங்கப்படும்.

முதல் வருடத்தில் 100 சதவீத கழிவில் விமானத்தை தரையிறக்கல் மற்றும் நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தில் இருந்து விடுவிக்கவும், இரண்டாம் வருடத்தில் 75 சதவீத கழிவும், மூன்றாம் வருடத்தில் 50 சதவீத கழிவும், நான்காவது வருடத்தில் 25 சதவீத கழிவும் வழங்கப்படும்.

இதனிடையே, வாரத்திற்கு ஒருமுறையாவது மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்க முடிவு செய்தால், விமான நிறுவனங்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் மற்றும் விமானத்தை நிறுத்தி வைப்பதற்கும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading